தனது படிப்பை தொடர முடியாமல் வறுமையில் தவித்த மாணவியின்உயர்கல்விக்கு உதவிய திரு. கமல் ஹாசன்
18-05-2025
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகேயுள்ள தெற்குவாடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சோபனா. தந்தை மீனவக்கூலியாகக் கடலுக்குச் சென்று வருபவர். அம்மா நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்ப்பவர்.
வறுமையான குடும்பச் சூழலுக்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய சோபனா 562 மதிப்பெண்கள் பெற்று,
தான் படித்த அரசுப் பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்வானார்.
ஏதேனும் ஒரு கல்லூரியில் பட்டம் பயின்ற பிறகு குடிமைப்பணித் தேர்வு எழுத வேண்டும் என்பது சோபனாவின் கனவு. ஆனால், கடன் சுமையால் குடும்பம் அவதியுற்று வருவதால், உயர்கல்வியைத் தொடரும் சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து ஒரு ஆடையகத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் சோபனா.
இந்நிலையில், இவரைப்பற்றிய செய்திகளை சமூகவலைதளங்களில் கவனித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். உடனே மாணவி சோபனாவை சென்னைக்கு வரவழைத்து, தனது கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக சோபனா உயர்கல்வியைத் தொடரவும், அவரது கனவான குடிமைப்பணித் தேர்வுகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
இச்சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் மற்றும் மாணவரணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் உடனிருந்தனர்.
அந்த மாணவியை அழைத்து வந்து திரு. கமல் ஹாசன் அவர்களை சந்திக்க வைக்கும் நிகழ்வை, பாம்பனை சேர்ந்த கடலோசை சமுதாய ஒளிபரப்பு நிலையத்தலைவர் காயத்ரி உஸ்மான் அவர்களும், நிகழ்ச்சித் தலைவர் திரு. லெனின் அவர்களும் ஏற்பாடு செய்தனர்.
-ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
தனது படிப்பை தொடர முடியாமல் வறுமையில் தவித்த மாணவியின்உயர்கல்விக்கு உதவிய திரு. கமல் ஹாசன்.
18 May 2025